

புதுடெல்லி:
உத்தரபிரதேசத்தின் லக்னோவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரசாத் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான மருத்துவக்கல்லூரி ஒன்றில், மாணவர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்குவது தொடர்பான வழக்கில் லஞ்சம் பெற்றதாக சத்தீஸ்கார் மாநில ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி இஷ்ரத் மஸ்ரூர் குத்தூசி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், டெல்லி கூடுதல் மாவட்ட கோர்ட்டில் குத்தூசி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தனக்கு எதிரான வழக்கு தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதால், தனது புகழுக்கு களங்கம் ஏற்படுவதாகவும், எனவே இந்த செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி டுவிங்கிள், அடுத்த உத்தரவு வரும் வரை முன்னாள் நீதிபதி குத்தூசிக்கு எதிரான வழக்கு விசாரணை பற்றிய தகவல்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதித்தார்.