மணல் திருட்டை தடுக்க காவிரி ஆற்றங்கரையோரத்தில் பள்ளம் தோண்டும் பணி தீவிரம்

மணல் திருட்டை தடுக்க காவிரி ஆற்றங்கரையோரத்தில் வாகனம் செல்லாத வகையில் பள்ளம் தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மணல் திருட்டை தடுக்க காவிரி ஆற்றங்கரையோரத்தில் பள்ளம் தோண்டும் பணி தீவிரம்
Published on

மோகனூர்:

மோகனூர் அருகே மணப்பள்ளி ஊராட்சி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து மொபட், மோட்டார்சைக்கிள்களில் மணலை சாக்கு மூட்டைகளில் அள்ளி வந்து அதனை லாரிகளில் ஏற்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்குகு கடத்துவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

அதன்பேரில் பரமத்திவேலூர் தாசில்தார் ருக்குமணி தலைமையில் மண்டல துணை தாசில்தார் விஜயகாந்த், பாலப்பட்டி வருவாய் ஆய்வாளர் சகிதா, கிராம நிர்வாக அலுவலர் சதீஸ் ஆகியோர் மணப்பள்ளி காவிரி ஆற்றுப்பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சுமார் 2,600 சாக்கு மூட்டைகளில் மணல் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து அப்பகுதியில் வைத்திருந்தனர். இந்த நிலையில் அந்த மணல் மூட்டைகளை மர்ம நபர்கள் இரவில் திருடி சென்றுள்ளனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் காவிரி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி ஆற்றங்கரையோர பகுதிகளில் வாகனங்கள் செல்லாத வகையில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com