ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே நான்கு வழிச்சாலை பணிக்காக நிலங்கள் அளவீடு செய்யும் பணி

ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே நான்கு வழிச்சாலை பணிக்காக அரசு மற்றும் தனியார் நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே நான்கு வழிச்சாலை பணிக்காக நிலங்கள் அளவீடு செய்யும் பணி
Published on

பனைக்குளம்:

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாகவும், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் ஒ ன்றாக விளங்கும் ராமேசுவரம் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் -ராமேசுவரம் இடையிலான சாலை இரு வழிச்சாலையாக உள்ளதால் அதிக வாகன போக்குவரத்து காரணமாக அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன.

இதனை கருத்தில் கொண்டு ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதையடுத்து ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இ ருந்து ராமேசுவரம் வரையிலும் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களை சர்வேயர்கள் மூலம் அளவீடு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன் வலசை பகுதியில் ஓய்வுபெற்ற சர்வேயர் வேலு மற்றும் சார்பு ஆய்வாளர் காமேஸ்வரன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் நிலங்களை அளவீடு செய்து பதிவு செய்து கொண்டனர்.

இதுபற்றி தேசிய நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மதுரை-பரமக்குடி இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விடும். அதனை தொடர்ந்து 2-வது கட்டமாக பரமக்குடி-ராமநாதபுரம் இடையே நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம்-ராமேசுவரம் தனுஷ்கோடி வரையிலும் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்க உள்ளது. இதற்காக ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து ராமேசுவரம் வரையிலும் தற்போது உள்ள சாலையோடு சேர்த்து 60 மீட்டர் அகலத்திற்கு இடம் எடுக்க முடிவு செய்யப்பட்டுள் ளது. இதில் சர்வே துறையினர் மூலம் பல குழுக்களாக பிரிந்து அளவீடு செய்து கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சர்வே துறை மூலம் ஆய்வறிக்கை கிடைத்த பின்பு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு அனுப்பப்படும். நான்கு வழிச்சாலைக்கு தேவைப்படும் நிலங்களுக்கு தனியார், பட்டா உரிமையாளர்களுக்கு அரசு நிர்ணயம் செய்யும் தொகையானது வழங்கப்படும். ராமநாதபுரம்- ராமேசுவரம் இடையிலான நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்க இன்னும் 6 மாதத்திற்கு மேல் ஆகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com