மொரீஷியஸ் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய 27 டால்பின்கள் - எண்ணெய் கப்பல் விபத்து காரணமா?

மொரீஷியஸ் கடற்கரையில் கடந்த சில நாட்களில் மொத்த 27 டால்பின்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
எண்ணெய் கப்பல் விபத்து
எண்ணெய் கப்பல் விபத்து
Published on

போர்ட்டு லூயிஸ்:

ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான வகாஹியோ என்ற எண்ணெய் கப்பல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய பெருங்கடலில் மொரீஷியஸ் தீவு அருகே விபத்துக்குள்ளானது.

பவளப்பாறையில் கப்பல் மோதியதால் கப்பலில் உடைப்பு ஏற்பட்டு பல டன் கணக்கில் டீசல் மற்றும் எண்ணெய் கடலில் கலந்தது.

இதனால் மொரீஷியஸ் தீவுப்பகுதியில் மிகப்பெரிய அளவிலான சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்பட்டு வருகிறது. டன் கணக்கில் எண்ணெய் கடலில் கலந்துள்ளதால் அவற்றை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த எண்ணெய் கப்பல் விபத்து மொரீஷியஸ் தீவுப்பகுதியில் உள்ள கடல் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாவை முக்கிய வருவாயாக கொண்டுள்ள மொரீஷியஸ் தீவுகள் சம்பவத்தால் பெரும் இழப்பை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்து நடைபெற்ற மொரீஷியஸ் தீவுப்பகுதியில் கடந்த சில நாட்களாக டால்பின்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கின. 

தற்போதுவரை மொத்த 27 டால்பின்கள் உயிரிழந்த நிலையில் கரைஒதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தீவுப்பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கப்பல் விபத்து காரணமாக டால்பின்கள் உயிரிழந்திருக்கலாம் என கருத்துக்கள் நிலவி வந்தன. 

இதையடுத்து உயிரிழந்த டால்பின்கள் சிலவற்றை உடற்கூராய்வு செய்யப்பட்டது.  இந்த உடற்கூராய்வில் டால்பின்கள் உயிரிழப்பிற்கு கப்பல் விபத்தால் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமில்லை எனவும் உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே டால்பின்கள் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது என மொரீஷியஸ் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், 27 டால்பின்களையும் உடற்கூராய்வு செய்து எண்ணெய் கசிவுக்கு இந்த உயிரிழப்புகளுக்கும் எதேனும் தொடர்பு உள்ளதாக என கண்டறியவேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் மொரீஷியஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.    

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com