

தருமபுரி:
ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியில் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை தலைமைக் காவலரான தமிழகத்தைச் சேர்ந்த சுரேஷ் உயிரிழந்தார். மேலும் ஒரு வீரர் மற்றும் பொதுமக்கள் மூன்று பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் அத்துமீறலுக்கு எல்லைப்பகுதி முழுவதும் இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் எல்லையில் பதற்றமான சூழல்காணப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் வீர மரணமடைந்த தமிழக வீரர் சுரேஷின் உடல் இன்று காலை கோவை விமானநிலையம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து இருந்து சொந்த ஊரான தருமபுரி மாவட்டம் பண்டாரசெட்டிப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது.
பண்டாரசெட்டிப்பட்டியில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இறுதிச்சடங்குகளும் செய்யப்பட்டன. பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. #tamilnews