

கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவல் காவிரிநகர் பகுதியை சேர்ந்த சின்னதுரை என்பவரது இல்ல திருமண கறி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரசாந்த் என்ற ஞானபிரகாஷ், அண்ணாதுரை, செல்வமணி, சிங்காரவேல் ஆகியோருக்கும் இதே பகுதியை சேர்ந்த அர்ஜுன், ஐயப்பன், மற்றும் 3 சிறுவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அரிவாள், கத்தி, கற்களை கொண்டு தாக்கிக் கொண்டனர். மேலும் வீடுகளும் சூறையாடப்பட்டன.
தாக்குதலில் ஞானபிரகாஷ், அண்ணாதுரை, செல்வமணி, சிங்காரவேல் ஆகிய 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐயப்பன் (வயது37), அர்ஜுன் (30), மற்றும் 3 சிறுவர்கள் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.