

கருமத்தம்பட்டி:
கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த 50 வயது விவசாயி தோட்ட வீட்டில் வசித்து வந்தார். அவருடைய 17 வயது மகள் அங்கு தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி மாயமானார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சிறுமி கடத்தி செல்லப்பட்டு இருப்பது தெரியவந்தது.
திருப்பூர் மாவட்டம், மங்கலம் பள்ள பாளையத்தை சேர்ந்த ரஞ்சித் (வயது 25) என்ற டிரைவர் சிறுமியுடன் பழகி உள்ளார். அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார். பின்னர் ஒரு அறையில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கருமத்தம்பட்டி போலீசார் இரண்டு பேரையும் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு நேற்று அழைத்து வந்தனர். ரஞ்சித் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.