சிவகிரி அருகே திருமண ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவர் கைது

சிவகிரி அருகே இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

சிவகிரி:

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 30). விவசாய கூலிதொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சிவகிரி பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே 8 வருடங்களாக நட்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது காதலாக மாறி இருவரும் கணவன்-மனைவி போன்று பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று கணேசன், அந்த இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்று தங்கி இருந்து உள்ளார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் நள்ளிரவில் வீட்டின் கதவை திறந்து அவர்கள் சேர்ந்து இருந்ததை பார்த்து பிடித்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சங்கரன்கோவில் மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்கள் 2 பேரையும் அழைத்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் போது, எனக்கு இவள் யாரென்றே தெரியாது. இவளுக்கும். எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று கணேசன் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண், என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி என்னுடன் பழகினார். தற்போது என்னை திருமணம் செய்ய மறுக்கிறார் என்றார்.

இதுகுறித்து அந்த பெண், சிவகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்து, சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com