இன்று திருமணம்- புதுமாப்பிள்ளை மாயமானதால் போலீசார் தேடுதல் வேட்டை

புதுமாப்பிள்ளை மாயமானதால் இன்று நடைபெற இருந்த திருமணம் நின்று போனது. இதனால் திருமண வீடு களையிழந்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.
இன்று திருமணம்- புதுமாப்பிள்ளை மாயமானதால் போலீசார் தேடுதல் வேட்டை
Published on

சேலம்:

சேலம் கிச்சிப்பாளையம் ஓந்தாப்பிள்ளைக்காட்டை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் வினோத் (வயது 27).தனியார் பள்ளி ஆசிரியரான இவர் வீட்டிலும் மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்தார்.

இந்த நிலையில் வினோத்துக்கும், கரூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இன்று காலை கரபுரநாதர் கோவிலில் திருமணம் நடத்தவும், மாலையில் கிச்சிப்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாப்பிள்ளை வீட்டார் நேற்று காலை கரூருக்கு சென்று மணப்பெண்ணை அழைத்து வர தயாராகினர். அப்போது வெளியில் சென்ற வினோத் திடீரென மாயமானார்.அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வினோத்தை அக்கம் பக்கத்தில் தேடினர். எங்கு தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த தகவல் அறிந்த பெண் வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். இன்று நடைபெற இருந்த திருமணமும் நின்று போனது. திருமண வீடு களையிழந்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.

வினோத்தின் தாய் இறந்து விட்டதால் அவரது பாட்டி செல்வி தான் வினோத்தை கவனித்து வந்தார். வினோத் மாயமானது குறித்து கிச்சிப்பாளையம் போலீசில் செல்வி புகார் கொடுத்தார். வினோத்தின் தந்தை ராஜமாணிக்கத்திடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை என்று கூறிவிட்டார்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் வினோத்தும், ஒரு பெண்ணும் காதலித்தாக கூறப்படுகிறது. இதனால் இன்று நடைபெற இருந்த திருமணம் பிடிக்காமல் அந்த காதலியுடன் அவர் மாயமாகி இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அது குறித்து விசாரித்து வரும் போலீசார் அவரை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com