அரிமளம் அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

அரிமளம் அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசுக்கு தெரியாமல் உடல் எரிக்கப்பட்டதால் 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அடுத்துள்ள ஏம்பல் விசூர் கிராமத்தை சேர்ந்த அன்பு மகன் பாண்டி (வயது 28). புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வரும் இவருக்கும் சிவகங்கை மாவட்டம் கொடிகுலத்தை சேர்ந்த இளவரசி (22) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்தநிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த இளவரசி நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு இளவரசி தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இதில் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், போலீசுக்கு தெரியாமல் இளவரசி உடலை தகனம் செய்தனர்.

தகவல் அறிந்த வி.ஏ.ஓ. கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஏம்பல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் இளவரசியின் கணவர் பாண்டி, மாமனார் அன்பு உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருமணமாகி 3 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com