

அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளராக மனோஜ்பாண்டியன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இன்று நெல்லை வந்தார். அவருக்கு பாளை சமாதானபுரத்தில் கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் மனோஜ் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் ஆசியுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆட்சி நடத்தி வருகின்றனர். டெல்லியில் 20 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்பது வேறு வகையானது. தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு வேறு வகையான வழக்கு. சபாநாயகர் தீர்ப்பே நியாயமானது, வெற்றி பெறும்.
இந்த ஆட்சி முழுமையாக 5 ஆண்டுகள் நடக்கும். பின்னரும் தொடரும். ஜெயலலிதா மரணத்தில் யாருக்காக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது என்று எல்லோருக்கும் தெரியும். அவர்கள் அதில் இருந்து தப்ப முடியாது. பொறுத்திருந்து பாருங்கள் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். பொய் சொன்னவர்கள் மாட்டிக்கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews