மஞ்சூர் அருகே 3 மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்

ஒரு கிலோ பச்சை தேயிலைக்கு ரூ.30 விலை நிர்ணயிக்க கோரி மஞ்சூர் அருகே 3 மணி நேரம் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மஞ்சூர் அருகே 3 மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்
Published on

மஞ்சூர்:

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாக விளங்கி வருவது பச்சை தேயிலை விவசாயம் ஆகும். இதை நம்பி 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். பச்சை தேயிலை விலை குறைவாக இருப்பதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து வருகிறார்கள். பெரும்பாலான விவசாயிகள் மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர்.

தற்சமயம் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சம் ரூ.30 விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே விவசாயிகள் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். தற்சமயம் ஒரு கிலோ பச்சை தேயிலைக்கு கிடைப்பதோ ரூ.10 முதல் ரூ.12 வரை. இந்த விலையை கொண்டு விவசாயிகள் எந்தவித அடிப்படை தேவைகளும் பூர்த்தி செய்ய முடியாமல் அவதிபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க நீலகிரி மாவட்ட சிறு, குறு விவசாயிகள் சங்கம் சார்பில் தேயிலைக்கு குறைந்தபட்சம் ரூ.30 விலை நிர்ணயம் செய்ய வேண்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இதை தொடர்ந்து 3-வது கட்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மஞ்சூர் அருகில் உள்ள மேற்கு நாடு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அமைந்துள்ள ஒரக்குட்டி பஜாரில் நேற்று காலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட சிறு, குறு விவசாயகள் சங்க தலைவர் ஜே.பி. சுப்ரமணியம் தலைமை தாங்கினார். எடக்காடு வட்டார விவசாயிகள் சங்க தலைவர் மகாலிங்கம், முக்கிமலை சுகுமாரன், மஞ்சூர் பகுதி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் ஏ.பெள்ளி கலந்துகொண்டு விவசாயிகள் மத்தியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்து பேசினார். முடிவில் மகேந்திரன் நன்றி கூறினார்.

நேற்று காலை 11 மணி முதல் பகல் 2 மணி வரை 3 மணி நேரம் கொளுத்தும் வெயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் மாவட்டத்தில் உள்ள ஓட்டு மொத்த விவசாயிகளையும் திரட்டி ஊட்டியில் பேரணி நடத்துவது, விவசாயிகள் சார்பில் மத்திய, மாநில அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சந்தித்து மனு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் குறைந்தபட்ச விலை நிர்ணயத்திற்கு தீர்வு ஏற்படா விட்டால் இறுதி கட்டமாக மாவட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு சென்னை கோட்டையை நோக்கி ஊர்வலம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com