கும்பல் கொலைகளை தடுத்து நிறுத்துங்கள் - பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம்

கும்பல் கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு டைரக்டர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
டைரக்டர் மணிரத்னம் - நடிகை ரேவதி
டைரக்டர் மணிரத்னம் - நடிகை ரேவதி
Published on

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில், சில குறிப்பிட்ட சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் வடமாநிலங்களில் நடந்து வருகின்றன. இதில், உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. இந்நிலையில், பிரபலங்கள் பலர் இதற்கு கவலை தெரிவித்துள்ளனர்.

சினிமா இயக்குனர்கள் ஷியாம் பெனகல், அபர்ணா சென், மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், அனுராக் காஷ்யப், நடிகைகள் ரேவதி, கொங்கனா சென், வங்காள சினிமா ஜாம்பவான் சவுமித்ரா சாட்டர்ஜி, பாடகி சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, சமூக ஆர்வலர் விநாயக் சென் உள்பட 49 பிரபலங்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டாக ஒரு கடிதம் எழுதி உள்ளனர்.

சமீபகாலங்களில் கும்பல் கொலைகள் அதிகரித்து வருவது, அமைதியை விரும்பும் எங்களுக்கு கவலை அளிக்கிறது. ‘ஜெய் ஸ்ரீராம்’ என்பது ஆத்திரத்தை தூண்டும் கூச்சலாகி விட்டது.

ராமர், பெரும்பான்மை சமூகத்தினருக்கு புனிதமானவர். அவரை மாசுபடுத்த வேண்டாம். மேலும், மாற்றுக்கருத்து இல்லாவிட்டால், ஜனநாயகமே இருக்காது. ‘தேச விரோதி’, ‘நகர்ப்புற நக்சல்’ என்று பலவாறாக முத்திரை குத்துவதும், அரசுக்கு எதிரான மாற்றுக்கருத்துக்காக சிறையில் அடைப்பதும் நிறுத்தப்பட வேண்டும்.

கடந்த 2016-ம் ஆண்டு, பட்டியல் இனத்தவர் மீது 840 தாக்குதல் சம்பவங்கள் நடந்ததாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை தெரிவிக்கிறது.

முஸ்லிம்கள், பட்டியல் இனத்தவர் மற்றும் இதர சிறுபான்மையினரை கும்பல் கொலை செய்யும் சம்பவங்கள் உடனே நிறுத்தப்பட வேண்டும். இந்த கொலைகளை நீங்கள் பாராளுமன்றத்தில் கண்டித்து இருக்கிறீர்கள். அது போதுமானதல்ல. இதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com