28 முறை ஏமாற்றப்பட்டு மகனின் கல்விக்காக கடன் வாங்கிய ரூ.7 லட்சத்தை இழந்த பெண்

மகனின் கல்விக்காக வங்கியிலிருந்து கடன் பெற்று பெண் வைத்திருந்த ரூ.9.97 லட்சம் ரூபாயை, வங்கி மானேஜர் பேசுவதாக போனில் கூறி ஏ.டி.எம் கார்டு விபரங்களை வாங்கி 28 முறை சிறிது சிறிதாக மர்ம நபர் சுருட்டியுள்ளான்.
28 முறை ஏமாற்றப்பட்டு மகனின் கல்விக்காக கடன் வாங்கிய ரூ.7 லட்சத்தை இழந்த பெண்
Published on

மும்பை:

வங்கிக்கணக்கு, ஏடிஎம் கார்டு உள்ளிட்ட விபரங்களை யாருக்கும் தெரிவிக்க கூடாது என வங்கிகள் காட்டுகத்தலாக கூறி வருகிறது. போனில் மானேஜரோ அல்லது வங்கி அதிகாரிகளோ பேச மாட்டார்கள் எனவும் வங்கிகள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றன. அதையும், மீறி பலர் மோசடி பேர்வழிகளிடம் பணத்தை இழந்துள்ளனர். 

மும்பையில் உள்ள நேருல் செக்டார் பகுதியில் வசித்து வரும் தஸ்னிம் மோதக் என்பவர், தனது மகனின் படிப்புக்காக வங்கி ஒன்றில் ரூ.10 லட்சம் கடனாக பெற்றுள்ளார். அந்த ரூபாயை தனது வங்கிக்கணக்கில் அவர் சேமித்து வைத்துள்ளார். கடந்த மாதம் வங்கி மானேஜர் பேசுவதாக போனில் தொடர்பு கொண்ட ஆசாமி, உங்களது ஏடிஎம் கார்டு செயலிழந்து விட்டது. மீண்டும் அதனை சரிசெய்ய பாஸ்வேர்டு, கார்டு எண் ஆகியவற்றை கூறவும் என பேசி வாங்கியுள்ளார்.

கார்டு விபரங்களை பெற்றாலும், அந்த ஆசாமியால் பணத்தை சுருட்ட முடியவில்லை. ஒன் டைம் பாஸ்வேர்டு தஸ்னிம் மோதக்கின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவலாக வரும் என்பதால், அந்த ஒன் டைம் பாஸ்வேர்ட் இல்லாமல் பணத்தை பரிமாற்றம் செய்ய முடியவில்லை.

இதனை அடுத்து, மோதக்கை தொடர்பு கொண்ட அந்த ஆசாமி ஒன் டைம் பாஸ்வேர்டை பெற்றுள்ளார். ஒரு தடவை, இரண்டு தடவை அல்ல 28 தடவை இப்படி போனில் பேசி ஒன் டைம் பாஸ்வேர்டை மோதக்கிடம் இருந்து பெற்று கொஞ்சம் கொஞ்சமாக ரூ.9.97 லட்சம் பணத்தை அந்த ஆசாமி சுருட்டியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் வங்கிக்கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் செய்யும் போதும் மோதக்கின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. ஆனால், அவர் அதனை கண்டு கொள்ளவில்லை. வங்கிக்கு சென்று பாஸ்புக்கை பிரிண்ட் செய்யும் போது தான் கணக்கில் இருந்த ரூபாய் கரைந்து போனது அவருக்கு தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து, போலீசுக்கு சென்று மோதக் புகார் அளிக்க, போலீசார் அந்த ஆசாமியை தேடி வருகின்றனர். 28 முறை பணம் போயுள்ளதாக குறுந்தகவல் வந்தும் மோதக் ஏன் சந்தேகம் அடையாமல், ஒவ்வொரு முறையும் குற்றவாளிக்கு ஒன் டைம் பாஸ்வேர்டை கூறியுள்ளது ஏன்? என குழப்பமாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com