ஆர்டர் செய்தது செல்போன் - பார்சலில் வந்தது சோப்புக் கட்டி

இணைய வழி வர்த்தகம் மூலம் பணம் கட்டி செல்போனுக்கு பதிலாக சோப்புக் கட்டி வந்தது தொடர்பாக இணையவழி வர்த்தக நிறுவன அதிகாரி உள்பட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. #OnlineMobile
ஆர்டர் செய்தது செல்போன் - பார்சலில் வந்தது சோப்புக் கட்டி
Published on

நொய்டா:

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் அமேசான் இணைய வழி வர்த்தக நிறுவனத்திடம் குறிப்பிட்ட ரக செல்போன் கேட்டு கடந்த 23-ந்தேதி ஆர்டர் செய்தார். அடுத்த 4 நாட்கள் கழித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வழியாக அவருக்கு ஒரு பார்சல் வந்தது.

அதை பிரித்துப் பார்த்தவருக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் அவர் பணம் கட்டி கேட்டிருந்த செல்போனுக்கு பதிலாக அந்த பார்சலுக்குள் சோப்புக் கட்டி ஒன்று இருந்தது. இதுபற்றி அந்த வாடிக்கையாளர், அருகில் உள்ள பிஸ்ரா போலீஸ் நிலையத்தில் அமேசான் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி அமித் அகர்வால், தர்ஷிதா லாஜிஸ்டிக்ஸ் நிறுவன இயக்குனர்கள் பிரதீப் குமார், ரவிஸ் அகர்வால் மற்றும் பார்சலை கொண்டு வந்த அனில் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இச்சம்பவத்தை உறுதி செய்த அமேசான் இந்தியா நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு பணத்தை திருப்பி அளிக்க சம்மதம் தெரிவித்து உள்ளது. மேலும், இதுபற்றி அந்த நிறுவனம் கூறுகையில், “இதுபோன்ற மோசடிகளை நாங்கள் தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம். இந்த விவகாரத்தில் போலீசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்” என்று தெரிவித்து உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com