

லக்னோ:
நாடு முழுவதும் பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் நடத்தப்படும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமின்றி, அறியாமையால் சில மக்கள் நடத்தும் கும்பல் தாக்குதல்களினால் உயிரிப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாடு கடத்தியதாக சிலர் மீது பொதுமக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் இருந்து அவர்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தாக்கப்பட்டவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அறியாமையினால் நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்களினால் தொடர்ந்து உயிர்கள் பலியாவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது. #UttarPradesh #MobLynching