இங்கிலாந்து: பர்மிங்காம் கத்திக்குத்து தாக்குதல் தொடர்பாக ஒருவர் கைது

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட நபர்
போலீசாரால் கைது செய்யப்பட்ட நபர்
Published on

லண்டன்:

இங்கிலாந்து நாட்டின் வெஸ்ட் மிட் லேண்ட்ஸ் மாகாணத்தின் பர்மிங்காம் நகரின் இரவு நேர நிகழ்ச்சிகளுக்கு மிகவும் பிரபலமான இடமான கான்ஸ்டிடியுசன் ஹில் பகுதியில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை மர்ம நபர் ஒருவன் வந்தான். 

மேலும், தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக்கொண்டு லிவரி, இர்விங், ஹர்ஷ் ஆகிய தெருக்களில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலை நடத்திவிட்டு அந்த மர்ம நபர் அந்த பகுதியை விட்டு தப்பிச்சென்றுவிட்டான்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 8  பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 1 நபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

எஞ்சிய 7 பேரும் காயங்களுடன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் இந்த தாக்குதல் குறிப்பிட்ட நபர்களை குறிவைத்தே நடத்தப்பட்டதாக தெரிவித்தனர். மேலும், தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை தீவிரமாக தேடிவருவதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பர்மிங்காம் தாக்குதல் தொடர்பாக செல்லி ஒக் பகுதியை சேர்ந்த ஒரு நபரை சந்தேகத்தின் அடிப்படியில் போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் 27 வயது நிரம்பிய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், அந்த நபரின் பெயர் உள்ளிட்ட எந்த விவரங்களையும் போலீசார் வெளியிடவில்லை. மேலும், சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த கைது நடைபெற்றுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com