

திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மடப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் கிளேனர் (வயது 33). இவரது மனைவி ஆரோக்கிய மேரி (வயது 28).இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதேபோல் நேற்று நள்ளிரவும் ஜான் கிளேன ருக்கும், ஆரோக்கிய மேரிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜான் கிளேனர், திடீரென அங்கு இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஆரோக்கியமேரி இறந்தார்.
மனைவி இறந்ததால் ஜான் கிளேனர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த நிலையில் ஆரோக்கிய மேரி கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ஆரோக்கிய மேரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மனைவியை கழுத்து அறுத்து கொன்ற ஜான் கிளேனரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.