விஜய் மல்லையாவுக்கு எதிராக மேலும் ஒரு கைது உத்தரவு

இந்திய வங்கிகளில் 6 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவுக்கு எதிராக மேலும் ஒரு கைது உத்தரவை மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. #Mallyaarrestordered #VijayMallya
விஜய் மல்லையாவுக்கு எதிராக மேலும் ஒரு கைது உத்தரவு
Published on

மும்பை:

இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. 

இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மல்லையாவுக்கு எதிராக செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. 

தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில், கடந்த 2005-10-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 6,027 கோடி ரூபாயை கடனாக பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக இந்திய வங்கிகள் குழுமம் சார்பில் மும்பையில் உள்ள சிறப்பு நீதி மன்றத்தில் பொருளாதாரத்துறை அமலாக்க அதிகாரிகள் தனியாக ஒரு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு சிறப்பு நீதிபதி எம்.எஸ். ஆஸ்மி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்பிஷர் ஏர்லைன்ஸ், யுனைட்டட் பிரிவரீஸ் ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிக்கு இவ்வழக்கில் சம்மன் அனுப்புமாறு உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்றம், விஜய் மல்லையாவை கைது செய்ய ஜாமினில் வெளிவர முடியாத உத்தரவையும் பிறப்பித்துடன், மறுவிசாரணையை ஜூலை மாதம் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. #Mallyaarrestordered #VijayMallya 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com