மாலத்தீவு அதிபர் பதவிக்கு செப்டம்பர் 23-ம் தேதி தேர்தல்

ஐரோப்பிய நாடுகளின் தொடர் வற்புறுத்தலுக்கு இணங்க, மாலத்தீவு அதிபர் பதவிக்கு செப்டம்பர் 23-ம் தேதி தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. #Maldivespresidentialelection
மாலத்தீவு அதிபர் பதவிக்கு செப்டம்பர் 23-ம் தேதி தேர்தல்
Published on

மாலே:

ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாலத்தீவின் முதல் அதிபர் முஹம்மது நஷீத்தின் ஆட்சி கடந்த 2012-ம் ஆண்டில் நடைபெற்ற போலீஸ் கலகத்தால் வீழ்த்தப்பட்டது. பயங்கரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நஷீத், 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 2015-ம் ஆண்டு காவலில் அடைக்கப்பட்டார்.

சில வெளிநாடுகளில் அழுத்தத்துக்கு இணங்கி, உடல்நலக்குறைவுக்காக சிகிச்சை பெற பிரிட்டன் நாட்டுக்கு அவர் செல்ல கடந்த 2016-ம் ஆண்டு மாலத்தீவு அரசு அனுமதி அளித்தது. பிரிட்டன் அரசால் அரசியல் தஞ்சம் அளிக்கப்பட்ட முஹம்மது நஷீத் தற்போது இலங்கையில் தங்கியுள்ளார். 

இதற்கிடையில், சுமார் 4 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாலத்தீவு நாட்டில் ஜனநாயக முறைப்படி அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் உள்நாட்டில் உள்ள சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு நியாயமான முறையில் அங்கு தேர்தலை நடத்த வேண்டும் என ஐரோப்பிய நாடுகளும் அழுத்தம் தந்து வந்தன.

இந்த தேர்தலில் மாலத்தீவு குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் நஷீத் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை யாமீன் அப்துல்லா தலைமையிலான அரசு சமீபத்தில் நிராகரித்து விட்டது.

எதிர்வரும் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக தற்போதைய அதிபர் யாமீன் அப்துல்லா அறிவித்துள்ள நிலையில் மாலத்தீவு அதிபர் பதவிக்கு வரும் செப்டம்பர் மாதம் 23-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அந்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி அஹமது ஷரீப் நேற்று அறிவித்துள்ளார்.

இந்த தேர்தல் வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ள அவர், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த அரசியல் வல்லுனர்கள் தேர்தல் மேற்பார்வையாளர்களாக இடம்பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். #Maldivespresidentialelection

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com