மலேசிய கடலோர காவல் படையினரிடம் சிக்கிய ரோஹிங்யா அகதிகள்

2 மாதங்கள் கடலில் தத்தளித்த 270 ரோஹிங்யா அகதிகள் மலேசிய கடலோர காவல் படையினரால் பிடிக்கப்பட்டனர்.
ரோஹிங்யா அகதிகள் - கோப்புப்படம்
ரோஹிங்யா அகதிகள் - கோப்புப்படம்
Published on

கோலாலம்பூர்:

மியான்மரில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வந்த ரோஹிங்யா அகதிகள் லட்சக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறினர். அவர்கள் அண்டைநாடான வங்காளதேசத்துக்கு சென்று காக்ஸ் பஜார் முகாம்களில் வசித்து வருகின்றனர். அங்கிருந்து ஏராளமானோர் மலேசியாவுக்கு செல்ல முயற்சித்துள்ளனர்.

இந்த நிலையில், மலேசிய கடலோர காவல் படையினர் கடந்த 8-ந்தேதியன்று, லங்காவி தீவு பகுதியில் அகதிகள் படகு ஒன்றை பார்த்தனர். அந்த படகை அவர்கள் சர்வதேச தண்ணீர் பகுதியில் செலுத்த திட்டமிட்டதாக தெரிகிறது.ஆனால் அவர்கள் படகை நெருங்கியபோது, அதில் இருந்த சிலர் கடலில் குதித்தனர். ஆனால் படகில் இருந்த சுமார் 270 பேர் கடலோர காவல் படையினரால் பிடிக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டு, படகு லங்காவி தீவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 270 அகதிகளும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே தெற்கு வங்காளதேசத்தில் இருந்து வெளியேறியவர்கள், கொரோனா தொற்று நோய் பரவலால் கப்பல்துறைக்கு செல்ல முடியாமல் ஏறத்தாழ 2 மாத காலமாக கடலில் தவித்து வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.மொத்தம் அந்தப் படகில் 500 பேர் வந்ததாகவும், பிடிபட்டவர்கள் தவிர எஞ்சியவர்கள் நீந்தி கரை சேர்ந்து விட்டதாக தெரிய வந்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான ரோஹிங்யா அகதிகள் சட்ட விரோதமாக மலேசியாவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவததால் அகதிகள் படகுகளை தரை இறக்க மலேசியா மறுத்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் 22 படகுகள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com