மீனாட்சி அம்மன் கோவிலில் பிட்டுத்திருவிழா 9-ந்தேதி தொடங்குகிறது

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் ஆவணி மூலத்திருவிழா எனப்படும் பிட்டுத்திருவிழா வருகிற 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மீனாட்சி அம்மன் கோவிலில் பிட்டுத்திருவிழா 9-ந்தேதி தொடங்குகிறது
Published on

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் ஆவணி மூலத்திருவிழா எனப்படும் பிட்டுத்திருவிழா வருகிற 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழா நடைபெறும் 14-ந்தேதி வரை காலை, மாலையில் சந்தரசேகரர் உற்சவம் நடைபெறுகிறது. வருகிற 15-ந் தேதி கருங்குருவிக்கு உபதேசம் நடைபெறுகிறது.

பின்னர் நாரைக்கு முக்தியளித்தல், மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொறிகிழி வழங்குதல், உலவாக்கோட்டை, பாணனுக்கு அங்கம் வெட்டியது ஆகிய திருவிளையாடல் அடிப்படையிலான விழாக்கள் நடைபெறுகின்றன.

வருகிற 20-ந் தேதி மாலை திருஞானசம்பந்தர் சைவ சமயத்தை நிலைநாட்டிய லீலை நிகழ்த்திக்காட்டப்படுகிறது.

21-ந் தேதி சுந்தரேசுவரருக்கு சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் இரவு 7.30 மணிக்கு கும்ப லக்கனத்தில் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை பூஜையானது 23-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக கோவிலில் இருந்து அன்று காலை புறப்பாடாகும் சுவாமி, அம்மன் மற்றும் திருஞான சம்பந்தர் சுவாமிகள் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள புட்டுத் தோப்பு பகுதிக்கு செல்கின்றனர்.

சுவாமி-அம்மன் கோவிலில் இருந்து புட்டுத் தோப்பு பகுதிக்கு செல்வதை அடுத்து கோவில் நடையானது சாத்தப்படுகிறது. இருப்பினும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் பக்தர்கள் காலை 7.30 மணி முதல் வடக்கு கோபுரவாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர்.

அவர்கள ஆயிரங்கால் மண்டபத்துக்குள் பகல் 12.30 மணி வரை செல்லலாம். பின்னர் மாலையில் கோவில் நடை வழக்கம் போல திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com