

மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் 1200-க்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் ஒருசில மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே, பன்றிக்காய்ச்சலை கண்டறியும் பரிசோதனை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளையே அணுக வேண்டிய நிலை உள்ளது.
இதனால், பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் கிடைக்கப் பெறாமலும், நோயின் தன்மை அதிகரிக்கும் சூழலும் இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மருந்துகள் இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களுக்கான தனி வார்டுகள் ஏற்படுத்தப்படவில்லை.
எனவே அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்புகளை கண்டறியும் பரிசோதனை வசதிகளைக் கொண்ட பி.எஸ்.எல்.4 (பயோ சேப்டி லேப்-4)ஆய்வகத்தை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.
மேலும் அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் பன்றிக்காய்ச்சல் நோயைக் கண்டறியும் சிகிச்சை முறையான பாலிமெரிஸ் செயின் ரியாக்ஷன் கிட் வசதியை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
உலக சுகாதார அமைப்பின் கோட்பாடுகளுக்கு உட்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பாதுகாக்கப்பட்ட தனி வார்டுகளை அமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில இன்று விசாரணைக்கு வந்தது.