

தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் டாக்டர் கதிர்காமு. பெரியகுளம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடுகிறார்.
இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2015-ம் ஆண்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வந்த பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி, கடந்த 8-ந்தேதி தேனி அனைத்து மகளிர் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அ.ம.மு.க. சார்பில் போட்டியிடுகிறேன். எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.
அதற்கு அரசு வக்கீல், இன்று (வெள்ளிக்கிழமை) வரை மனுதாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று உறுதியளித்தார். இதையடுத்து முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை 12-ந்தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.