18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் 1 வாரத்தில் தீர்ப்பு?

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 1 வாரத்தில் தீர்ப்பு வெளியாகலாம் என்றும் புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை தீர்ப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிய வருகிறது. #18MLAsCase #MLAsDisqualificationCase
18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் 1 வாரத்தில் தீர்ப்பு?
Published on

அ.தி.மு.க.வில் தனித்தனியாக செயல்பட்ட அணிகள் இணைப்புக்குப் பின் டி.டி.வி. தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 18 பேர் ஆதரித்தனர்.

அவர்கள் அ.தி.மு.க.வில் இருந்து முறைப்படி விலகாமலேயே தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டனர். அதே சமயம் தாங்கள் அ.தி.மு.க.வில் நீடிப்பதாகவும் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களும் கவர்னரை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். ஆனால் கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முதல்வரை மாற்றக்கோருவது உள்கட்சி விவகாரம். இதில் தான் தலையிட முடியாது என்று கவர்னர் மறுத்து விட்டதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே 18 எம்.எல்.ஏ.க்களும் கட்டளையை மீறியதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அ.தி.மு.க. கொறடா சபாநாயகருக்கு சிபாரிசு செய்தார். இதை ஏற்று 18 எம்.எல்.ஏ.க்களும் விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.

ஆனால் விளக்கம் அளிக்க மறுத்து விட்டதால் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து 18 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது செல்லும் என்று அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜியும், சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று நீதிபதி எம்.சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பளித்தனர்.

இதில் சபாநாயகர், சட்டசபை செயலாளர், முதல்- அமைச்சர், அரசு கொறடா ஆகியோர் சார்பில் மூத்த வக்கீல்கள் ஆஜராகி வாதாடினர்.

இதேபோல் தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பிலும் மூத்த வக்கீல்கள் ஆஜராகி தங்கள் வாதத்தை எடுத்து வைத்தனர். நேற்று இறுதி கட்ட விசாரணை நடைபெற்றது.

அப்போது தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சார்பில் வக்கீல்கள் வாதாடுகையில், “கவர்னரை சந்தித்தது ஆட்சி கவிழ்ப்பு முயற்சி என்று கூற முடியாது, தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்து செயல்படவில்லை, இதற்காக கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

சபாநாயகர் தரப்பு வக்கீல் வாதாடும்போது, 18 பேருக்கும் போதிய அவகாசம் வழங்கப்பட்ட பின்பே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரை மாற்றும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என்று தெரிந்தும் அவரிடம் மனு கொடுத்துள்ளனர். இதன் மூலம் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டுள்ளது தெரிய வருகிறது. எனவே தகுதி நீக்கம் செய்தது சரிதான் என்றனர்.

வக்கீல்கள் வாதம் நிறைவடைந்ததால் இந்த வழக்கில் அடுத்த கட்டமாக எழுத்துப்பூர்வமான பதில்கள் தாக்கல் செய்ய வேண்டுமா என்று வக்கீல்கள் கேட்டனர்.

அதற்கு அவசியம் இல்லை, வக்கீல்கள் வாதமே தனக்கு நிறைவாக இருக்கிறது என்று நீதிபதி சத்திய நாராயணன் கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com