மசூதி அருகே போலீஸ் டி.எஸ்.பி. அடித்துக் கொலை - காஷ்மீர் முதல்வர், பிரிவினைவாத தலைவர் கண்டனம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் போலீஸ் டி.எஸ்.பி. அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அம்மாநில முதல் மந்திரி மற்றும் ஹுரியத் பிரிவினைவாதக் கட்சி தலைவர் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மசூதி அருகே போலீஸ் டி.எஸ்.பி. அடித்துக் கொலை - காஷ்மீர் முதல்வர், பிரிவினைவாத தலைவர் கண்டனம்
Published on

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர், நவ்ஹாட் என்ற பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில் நேற்று மாலை பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்துவிட்டு வெளியேவந்த போலீஸ் டி.எஸ்.பி. முகமத் அயுப் பண்டித் என்பவரை 200 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி சரமாரியாக தாக்கியது.

அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க டி.எஸ்.பி. துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 பேர் காயம் அடைந்தனர். எனினும், அவரை சூழ்ந்துகொண்ட கும்பல் தொடர்ந்து தாக்கியது. டி.எஸ்.பி. சுயநினைவு இழந்து மயங்கி விழுந்தார்.

உடனே அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி மற்றும் ஹுரியத் பிரிவினைவாதக் கட்சி தலைவர் மிர்வாயிஸ் உமர் பாரூக் ஆகியோர் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள மிர்வாயிஸ் உமர் பாரூக், ‘இதைப்போன்ற காட்டுமிராண்டித்தனமும் கும்பலாக கூடி ஒருவரை தாக்கும் முறையும் காஷ்மீர் மக்களின் குணாதிசயத்துக்கும் இஸ்லாமிய போதனைகளுக்கும் சற்றும் தொடர்பு உடையது அல்ல.  

மனிதாபிமானத்துக்கு தலைகுனிவை உண்டாக்கும் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்புடையது அல்ல. நவ்ஹாட் பகுதியில் நடைபெற்ற சம்பவத்தினால் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலையில் கொலையுண்ட டி.எஸ்.பி.யின் இறுதிச் சடங்கு நடந்தது. இதில் சக போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட போது கண்ணீர் விட்டு அழுதனர். அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய காஷ்மீர் முதல் மந்திரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டிலேயே மிக சிறப்புக்குரிய காவல் துறையாக விளங்கிவரும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் சகிப்புத்தன்மைக்கு பேர் போனவர்கள். வீரம் மிக்கவர்களாக இருந்தாலும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும்போது தங்கள் மக்கள் என்பதை உணர்ந்து சகிப்புத்தன்மையை கடைபிடித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட போலீஸ் படையின் ஒரு அதிகாரியை கும்பலாக பலர் சேர்ந்து தாக்கிக் கொன்ற சம்பவம் அவமானகரமானதாகும். இந்நிலையில், போலீசாரின் பொறுமையும், சகிப்புத்தன்மையும் எல்லைகடந்து போனால், எதிர்விளைவு மிகவும் கடினமாக இருக்கும் என நான் கருதுகிறேன்.

போலீசாரின் கடமையுணர்வை பற்றி நாம் புரிந்துகொள்ள இன்னும் காலம் உள்ளது என நான் நம்புகிறேன். காவல்துறை என்பது நம்மை பாதுகாக்கும் நமது சொந்தத் துறையாக நாம் நினைக்க வேண்டும். அவர்களை இப்படி நடத்துவது அவமானகரமானது என்பதை பொதுமக்களாகிய நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com