

புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. ஜனாதிபதி உரையைத் தொடர்ந்து கடந்த 1-ம் தேதி மத்திய பொது பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் மக்களவை இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது, சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜஸ்தானின் அல்வார் தொகுதியில் வெற்றி பெற்ற கரன் சிங் யாதவ், அஜ்மீர் தொகுதியில் வெற்றி பெற்ற ரகு சர்மா, மேற்கு வங்க மாநிலம் உலுபேரியா தொகுதியில் வெற்றி பெற்ற சஜ்தா அகமது ஆகியோர் பதவியேற்றனர்.
அதன்பின்னர், சமீபத்தில் மரணம் அடைந்த உத்தர பிரதேச எம்.பி. ஹூக்கும் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் குறிப்பை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வாசித்தார். அவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். நாளை காலை 11 மணிக்கு மக்களவை மீண்டும் கூடும். #tamilnews