விளாத்திகுளம் அருகே காதல் திருமணம் செய்த ஜோடி ஆணவக்கொலை?

விளாத்திகுளம் அருகே காதல் திருமணம் செய்த புதுமண ஜோடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி
திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி
Published on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் சமத்துவபுரம் பெரியார்நகரை சேர்ந்தவர் திருமேனி. இவரது மகன் சோலைராஜ் (வயது 23). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைப்பாறு பகுதியில் உள்ள உப்பளத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

அங்கு விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி பல்லாகுளத்தை சேர்ந்த பேச்சியம்மாள் என்ற ஜோதி (21) என்பவரும் வேலை பார்த்து வந்தார். அப்போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்பு பெரியார்நகரில் புதுமண ஜோடிகள் தனியாக வசித்து வந்தனர். திருமணத்திற்கு பின் சோலைராஜ் மட்டும் கூலிவேலைக்கு சென்று வந்தார். ஜோதி வீட்டில் இருந்து வந்தார்.

நேற்று இரவு கணவன்- மனைவி இருவரும் காற்றுக்காக வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கினர். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு மர்ம கும்பல் அரிவாள்களுடன் அங்கு வந்தது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டின் முன் படுத்து தூங்கிக் கொண்டிருந்த கணவன்- மனைவி இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சூரங்குடி இன்ஸ்பெக்டர் ராஜலெட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

அவர்கள் சோலைராஜ், ஜோதி ஆகிய இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம் செய்த புதுமண ஜோடி வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவே இதன் காரணமாக கொலை செய்யப்பட்டனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? கொலை செய்த மர்ம கும்பல் யார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன்-மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com