

திருமங்கலம்:
தஞ்சையில் இருந்து நெல்லைக்கு நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி புறப்பட்டது. விருதுநகர் மாவட்டம் சேத்தூர் சோலைசேரியைச் சேர்ந்த இசக்கிமுத்து (வயது 27) என்பவர் லாரியை ஓட்டி வந்தார். மற்றொரு டிரைவரான ராஜபாளையம் கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த பால்ராஜ் (36) லாரியில் தூங்கிக் கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை 4.30 மணி அளவில் லாரி திருமங்கலம் அருகே உள்ள சொக்கநாதம்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. டிரைவர் இசக்கிமுத்து லாரியை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்கச் சென்றார்.
அப்போது இருட்டில் மறைந்திருந்த 5 பேர் கொண்ட கும்பல் இசக்கி முத்துவை சரமாரியாக கட்டையால் தாக்கியது. பின்னர் அவரிடமிருந்தத ரூ.25 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடியது.
கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த இசக்கிமுத்து திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கொள்ளை சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகிறார்கள்.