

பர்கூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலங்கா பகுதியை சேர்ந்தவர்கள் குமுதா (வயது 37), ஆண்டாள் (30), ஸ்ரீராம் (14), ரோகித் (4), பரிமளா (56). இவர்கள் அனைவரும் வேலூரில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஒரு காரில் சென்றனர். அந்த காரை எலங்கா பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் காரை ஓட்டி சென்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள செட்டிப்பள்ளி என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து லாரி ஒன்று சாலையின் குறுக்கே வந்துள்ளது. அந்த நேரம் லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது.
இந்த விபத்தில் காரில் சென்ற சிறுவன் ரோகித் உள்பட 6 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.