சென்னையில் சாலையில் வீசப்பட்ட ரூ.1.56 கோடி கொள்ளையடித்த பணம்- போலீஸ் தகவல்

சென்னையில் சந்தேக நபர் சாலையில் வீசிய ரூ.1.56 கோடி பணம், தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் சாலையில் வீசப்பட்ட ரூ.1.56 கோடி கொள்ளையடித்த பணம்- போலீஸ் தகவல்
Published on

சென்னை:

சென்னை கோட்டூர்புரத்தில் போலீசார் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரு நபர் மீது சந்தேகமடைந்த போலீசார், அந்த நபரை விரட்டிச் சென்றனர். அப்போது, அந்த நபர் தான் வைத்திருந்த பையை சாலையில் வீசிவிட்டு தப்பிச் சென்றார்.

போலீசார் விரைந்து சென்று பையை எடுத்து பார்த்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பணப்பையை பத்திரமாக போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் பணத்தை எண்ணி பார்த்தனர். அதில் ரூ.1 கோடியே 56 லட்சம் பணம் இருந்தது.

விசாரணையில் அந்தப் பணம் நந்தனத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்பிரமணியன் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டதும், போலீசாரைப் பார்த்ததும் பணத்தை சாலையில் வீசிவிட்டுச் சென்றதும் தெரியவந்துள்ளது. தப்பிச் சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பணத்தை எடுத்துச் சென்ற வாலிபரின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

பாலசுப்பிரமணியன் தொழில் விஷயமாக நேற்று கொல்கத்தா சென்றுள்ள நிலையில் அவரது வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. இதுபற்றி அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com