ராஜபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதம்

ராஜபாளையம் அருகே கூலி உயர்வு வழங்க கோரி விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
ராஜபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதம்
Published on

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் சேலை, கைலி, துண்டு உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி நடைபெறுகிறது. இந்த தொழிலில் விசைத் தறி தொழிலாளர்கள், வைண்டிங் தொழிலாளர்கள், சாயப்பட்டறை தொழிலாளர்கள், நூல் மற்றும் பாவு சுற்றும் தொழிலாளர்கள் என 1200-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒரு முறை கூலி உயர்வு தொடர்பான ஒப்பந்தம் போடப்படும். கடந்த 2014-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவடைந்த நிலையில் இதுவரை கூலி உயர்வு தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த பதிலும் இல்லை.

இதனை கண்டித்தும், புதிய கூலி மற்றும் ஊக்க தொகை தொடர்பான ஒப்பந்தம் போட வலியுறுத்தியும் தொழிலாளர்கள் சார்பில் 2 முறை போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் 4 கட்ட பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டது.பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் கடந்த 3 வாரங்களாக தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதை தவிர்த்து வந்தனர்.

இருப்பினும் உற்பத்தியாளர்கள் தரப்பிலும், அதிகாரிகள் தரப்பிலும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே 50 சதவீதம் கூலி உயர்வு, நாள் ஒன்றுக்கு ரூ. 15 ஊக்க தொகை, விடுமுறை ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ. 250 வழங்க கோரி இன்று முதல், தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

தளவாய்புரம் பஸ் நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள பந்தலில், நாள் ஒன்றுக்கு 20 தொழிலாளர்கள் என சுழற்சி முறையில், கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் காவல் துறையினர் தொழிற் சங்க பிரதிநிதிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் தரப்பில் இருந்து நாளை மாலை 5 ம் கட்ட பேச்சு வார்த்தைக்கு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பேச்சு வார்த்தையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற் சங்க பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படா விட்டால் மறியல், கஞ்சி தொட்டி திறப்பு உள்ளிட்ட அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com