ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பாக மீண்டும் வாக்குப்பதிவு - லண்டன் மேயர் வலியுறுத்தல்

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பான பிரிட்டனின் முடிவு தொடர்பாக மீண்டும் பொது வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என லண்டன் நகர மேயர் சாதிக் கான் வலியுறுத்தியுள்ளார். #Londonmayor #Brexitsecondreferendum
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பாக மீண்டும் வாக்குப்பதிவு - லண்டன் மேயர் வலியுறுத்தல்
Published on

லண்டன்:

ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில், கடந்த 1973-ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது.

இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. பெரும்பாலான மக்கள் ‘பிரெக்ஸிட்’ எனப்படும் வெளியேறும் முடிவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியேற பிரிட்டன் முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை பிரதமர் தெரசா மே தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் (பிரெக்ஸிட்) விவகாரத்தில், பிரதமர் தெரசா மேவின் கொள்கை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரெக்ஸிட் விவகாரத்துறை மந்திரி டேவிட் டேவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் நடவடிக்கையை, ஆளும் கன்சர்வேடிவ் கட்சி மிகவும் பலவீனமான முறையில் கையாள்வதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

பிரெக்ஸிட் நடவடிக்கையின்போது பிரிட்டனின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பேரங்கள் நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே, எனது பதவியை விட்டு விலகுகிறேன் என்று தனது ராஜினாமா கடிதத்தில் டேவிட் டேவிஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய யூனியலிருந்து பிரிந்தாலும், அதன் உறுப்பு நாடுகளுடன் தளர்வான ஏற்றுமதி - இறக்குமதி கொள்கை, பொது வர்த்தகச் சந்தை ஆகியவற்றைப் பின்பற்றுவதற்கு தெரசா மே தலைமையிலான அரசு பரிசீலித்து, செயல் திட்டங்களை வகுத்து வருகிறது.

ஐரோப்பிய யூனியலிருந்து வெளியேறும் விவகாரத்தில் தெரசா மே முன்னெடுத்துவரும் சில திட்டங்களை எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி மட்டுமின்றி, ஆளும்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் எதிர்த்து வருகின்றனர்.

உள்கட்சியில் அவருக்கு எதிராக சுமார் 70 எம்.பி.க்கள் போர்கொடி உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. தெரசா மே பதவி நீக்கம் செய்யப்படுவதற்கான வழிவகை என்ன? என்பது தொடர்பாக அவர்கள் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவர்களின் செயல்பாடுகளால் எனது பதவிக்கு ஆபத்து வராது என தெரசா மே கூறி வருகிறார். சிலரது மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் இறுதி திட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யும்போது, அது ஏற்புடையது தானா? என்பதை பாராளுமன்றம் தீர்மானிக்கட்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

இந்நிலையில், குழப்ப நிலையில் உள்ள பிரதமர் தெரசா மேவின் நடவடிக்கைகள் நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் என்பதால் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் பிரெக்சிட் விவகாரத்தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என லண்டன் நகர மேயர் சாதிக் கான் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழில் அவர் இன்று எழுதியுள்ள கட்டுரையில் தெரசா மே முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் அவர் நடத்திவரும் பிரெக்சிட் பேரம் பிரிட்டன் மக்களின் வாழ்க்கைத்தரத்தை சீர்குலைத்து விடும் என குறிப்பிட்டுள்ளார்.

அரசின் இந்த தோல்வியினால் ஐரோப்பிய யூனியனில் இருந்து நாம் வெளியேற வேண்டுமா? என்ற எண்ணத்துக்கு பெரும்பாலான மக்கள் தற்போது தள்ளப்பட்டுள்ளதால் பிரெக்சிட் விவகாரத்தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யப்பட வேண்டும் எனவும் சாதிக் கான் வலியுறுத்தியுள்ளார்.

மறு வாக்கெடுப்புக்கு அவசியம் இல்லை என்று எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரமி கார்பைன் கூறிவரும் நிலையில் அதே கட்சியை சேர்ந்த முத்த உறுப்பினரும் லண்டன் நகர மேயருமான சாதிக் கான் தற்போது முன்வைத்துள்ள கருத்து பிரிட்டன் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், அடுத்த வாரம் நடைபெறவுள்ள தொழிலாளர் கட்சி மாநாட்டில் லண்டன் மேயரின் இந்த கருத்து தொடர்பாக பரிசீலிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Londonmayor #Brexitsecondreferendum 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com