

பாராளுமன்ற மூன்றாவது கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மற்றும் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கினை பதிவு செய்தனர். காலை 10 மணி நிலவரப்படி சராசரியாக 10.29 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அசாமில் 12.36 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
பீகாரில் 12.64 சதவீதம், உத்தர பிரதேசத்தில் 10.36 சதவீதம், கோவாவில் 11.70 சதவீதம், குஜராத்தில் 9.99 சதவீதம், திரிபுராவில் 5.83 சதவீதம், மேற்கு வங்காளத்தில் 16.85 சதவீதம், சத்தீஸ்கரில் 12.58 சதவீதம், மகாராஷ்டிராவில் 6.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. ஜம்மு காஷ்மீரில் குறைந்தபட்சமாக 1.59 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன.
பிரதமர் மோடி அகமதாபாத்தின் ராணிப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவரது தாயார் ஹீராபென்மோடி ரெய்சானில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.