மெகபூபா போட்டியிடும் தொகுதியில் 11 மணி வரை ஒரு வாக்காளர் கூட வாக்களிக்கவில்லை

மெகபூபா போட்டியிடும் அனந்தநாக் தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து 11 மணி வரை ஒரு வாக்காளர் கூட வாக்களிக்கவில்லை. #LokSabhaElections2019
மெகபூபா போட்டியிடும் தொகுதியில் 11 மணி வரை ஒரு வாக்காளர் கூட வாக்களிக்கவில்லை
Published on

ஜம்மு:

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்தநாக் பாராளுமன்ற தொகுதி நாடு முழுவதும் மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா போட்டியிடுகிறார். கடந்த 2014-ம் ஆண்டு இதே தொகுதியில் வெற்றி பெற்ற அவர் மீண்டும் களம் இறங்கி உள்ளார்.

அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் குலாம் அகமது போட்டியிடுகிறார். தேசிய மாநாடு கட்சி சார்பில் மசூதி போட்டியிடுகிறார். இவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஆவார்.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் யூசுப் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் இந்த தொகுதியில் 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த தொகுதி அனந்த நாக், புல்வாமா, சோபியான், குல்கம் ஆகிய 4 மாவட்டங்களில் அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.

இதன் காரணமாக அனந்தநாக் பாராளுமன்ற தொகுதி தேர்தலை 3 கட்டமாக நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி ஏப்ரல் 23-ந்தேதி அனந்தநாக் மாவட்டத்திலும், ஏப்ரல் 29-ந்தேதி குல்கம் மாவட்டத்திலும், மே 6-ந்தேதி புல்வாமா, சோபியான் மாவட்டங்களிலும் ஓட்டுப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் ஒரு பாராளு மன்ற தொகுதிக்கு 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். 13 லட்சத்து 95 ஆயிரத்து 272 வாக்காளர்கள் கொண்ட இந்த தொகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடை பெற்றது.

இன்று அனந்தநாக் மாவட் டத்தில் மட்டும் நடைபெறும் ஓட்டுப்பதிவுக்கு ஆயிரத்து 842 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.

இவர்களை எதிர்நோக்கி நேற்று இரவு முதலே தேர்தல் பணியாளர்கள் தயாராக இருந்தனர். ஆனால் இன்று காலை ஒருவர்கூட வாக்களிக்க வரவில்லை.

7 மணிக்கு தொடங்கி 4 மணி நேரம் கடந்த பிறகும் அதாவது பகல் 11 மணி வரை 1,842 வாக்குச்சாவடிகளிலும் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.

வாக்காளர்கள் வருகைக்காக அதிகாரிகள் அதுவரை சும்மா காத்திருந்தனர். சில பகுதிகளில் வாக்களிக்க வருமாறு பொதுமக்களை அதிகாரிகள் அழைத்தனர். ஆனால் அவர்கள் வீடுகளை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்து விட்டனர்.

அனந்தநாக் தொகுதியில் பொதுமக்கள் யாரும் வாக்களிக்க வரக்கூடாது என்று கடந்த சில தினங்களாக பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்தப்படி இருந்தனர். இதன் காரணமாக அங்கு ஓட்டுப்பதிவில் மந்தநிலை காணப்படுகிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக பிற்பகல் 4 மணி வரைதான் ஓட்டுப்பதிவை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்குள் கணிசமானவர்களை அழைத்து வந்து வாக்குப் பதிவு செய்ய அதிகாரிகள் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

என்றாலும் அனந்தநாக் தொகுதியின் முதல் கட்ட வாக்குப்பதிவு வரலாறு காணாத வகையில் மிக மிக குறைவாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. #LokSabhaElections2019

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com