

புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு கடந்த வாரம் திங்கட்கிழமை தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பி.என்.பி. வங்கி மோசடி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒன்பதாவது நாளான இன்று காலை மக்களவை வழக்கம்போல் கூடியது. கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து அவைக்கு வந்து கோஷங்கள் எழுப்பினர். மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாகைகளை கைகளில் ஏந்தி கோஷமிட்டனர்.
பாராளுமன்ற விவகார துறை மந்திரி அனந்த குமார், எதிர்க்கட்சி உறுப்பினர்களை தங்களது இருக்கைகளில் சென்று அமரும்படி கேட்டுக் கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்த விஷயத்துக்கும் உரிய பதில்கள் அளிக்கப்படும். வங்கி மோசடி விவகாரம், காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மத்திய அரசு விவாதிக்க தயாராக உள்ளது என்றார்.
ஆனால் அவரது சமாதானத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வந்தனர். இதையடுத்து, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை பகல் 12 மணி வரை ஒத்தி வைத்தார்.
மீண்டும் அவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையை நாள்முழுதும் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, பாராளுமன்ற வளாகத்தின் முதல் மாடிக்கு சென்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர் விஜயா சாய் ரெட்டி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தும் பதாகையை காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து பாராளுமன்றம் முடங்கியிருப்பது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. #BudgetSession #LokSabha #Adjourned #tamilnews