திருவனந்தபுரம்:
கேரளா மாநிலத்தில் முன்னாள் முதல் மந்திரி உம்மண் சாண்டி பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். ஆனால், தற்போதைய முதல் மந்திரியாக பதவி வகித்து வரும் பினராயி விஜயன் தலைமையிலான அரசு, கேரளாவில் படிப்படியாக மதுவிலக்கை தளர்த்தி வருகிறது.
இந்நிலையில், கேரளா மாநிலத்தின் முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மது குடிப்போருக்கான குறைந்தபட்ச வயது வரம்பை அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. அப்போது மது குடிப்போருக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 21-ல் இருந்து 23-ஆக அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டது என தெரிவித்துள்ளனர்.