அமெரிக்க ஓட்டல் தாக்குதல்: கொலையாளி வீட்டில் குவியல் குவியலாக ஆயுதங்கள் சிக்கின

அமெரிக்க ஓட்டலில் தாக்குதல் நடத்திய கொலையாளியின் வீடு மற்றும் ஓட்டல் அறையில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் குண்டுகளை வெடிக்க செய்யும் எலெக்ட்ரானிக் கருவிகள் குவியல் குவியலாக சிக்கின.
அமெரிக்க ஓட்டல் தாக்குதல்: கொலையாளி வீட்டில் குவியல் குவியலாக ஆயுதங்கள் சிக்கின
Published on

லாஸ்வேகாஸ்:

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் உள்ள பிரபல ஓட்டலில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 59 பேர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஓட்டல் மாடியில் இருந்து துப்பாக்கியால் சுட்ட அந்த நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். அவரது பெயர் ஸ்டீபன் பட்டாக் (64) என்பதும், அந்த ஓட்டல் அறையில் அறை எடுத்து தங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

தாக்குதல் நடத்திய நபர் தங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்தான் என ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு கூறியிருந்தது. ஆனால், இந்த தாக்குதலை நடத்தியவருக்கு எந்த சர்வதேச தீவிரவாத அமைப்புடனும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்று லாஸ்வேகாஸ் நகர போலீசார் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், கொலையாளி ஸ்டீபன் பட்டாக் தங்கியிருந்த ஓட்டல் அறையில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு 23 துப்பாக்கிகள், ஏராளமான தோட்டாக்கள் சிக்கின. மெஸ்குயிட்டில் உள்ள அவனது வீட்டில் 19 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் குண்டுகளை வெடிக்க செய்யும் எலெக்ட்ரானிக் கருவிகள் குவியல் குவியலாக சிக்கின. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவனது காரில் ‘டேன்னரிட்’ எனப்படும் வெடி பொருட்கள், அமோனியா நைட்ரே எனப்படும் ஒரு வகை உரம் போன்றவை கைப்பற்றப்பட்டது. இதை வைத்து வெடிகுண்டு தயாரிக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகவலை லாஸ் வேகாஸ் செரீப் ஜோசப் லம்பார்டோ தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது, இச்சம்பவம் குறித்து விவாதிக்க 4 குற்றப் பிரிவு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பட்டாக் தங்கியிருந்த ஓட்டல் அறை மற்றும் அவரது உறவினர் வீடுகளில் விசாரணையும், சோதனையும் நடத்தி வருகின்றனர்” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com