

பாட்னா:
பீகார் முன்னாள் முதல்- மந்திரியும், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப்.
லாலு பிரசாத் இனி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து தேஜ் பிரதாப் தீவிர அரசியலில் குதித்தார். 29 வயதே ஆகும் அவர் கடந்த 2015-ம் ஆண்டு பீகாரில் சட்டசபை தேர்தல் நடந்தபோது முதன் முதலில் தேர்தலில் போட்டியிட்டார்.
வைசாலி மாவட்டம் மகுவா சட்டசபை தொகுதியில் இருந்து அவர் எம்.எல்.ஏ. ஆக தேர்ந்து எடுக்கப்பட்டார். இதையடுத்து நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் சுகாதார மந்திரியாகப் பொறுப்பேற்றார்.
நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி முறிவு ஏறபட்டதைத் தொடர்ந்து மந்திரி பதவியை பறிக்கொடுத்தார். அதன் பிறகு லாலு பிரசாத்துக்கு அடுத்தடுத்து சிறைத் தண்டனைகள் வழங்கப்பட்டதால் தேஜ்பிரதாப் மிகவும் வேதனையில் மூழ்கி இருந்தார்.
இந்த நிலையில் தேஜ் பிரதாப்புக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.வான சந்திரிகாராயின் மகள் ஐஸ்வர்யாராய் மணமகளாக நிச்சயிக்கப்பட்டுள்ளார்.
பீகாரில் 1970-ம் ஆண்டு பிப்ரவரி முதல் டிசம்பர் வரை 11 மாதங்கள் முதல்- மந்திரியாக இருந்தவர் டர்கோ ராய். இவரது பேத்திதான் ஐஸ்வர்யாராய். இவரை தேஜ்பிரதாப் திருமணம் செய்வதால் இரு முன்னாள் முதல்-மந்திரிகளின் குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தேஜ்பிரதாப் - ஐஸ்வர்யா ராய் இன்னும் 2 வாரங்களில் மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தத்தை அதிகாரப்பூர்வமாக செய்ய உள்ளனர். பாட்னாவில் இந்த நிச்சயதார்த்த விழா நடை பெற உள்ளது.
லாலு பிரசாத் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால், அவர் தனது மகனின் திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வாரா? என்பது இதுவரை உறுதியாக வில்லை.
தேஜ்பிரதாப் - ஐஸ்வர்யா ராய் திருமணம் அடுத்த மாதம் (மே) நடைபெற உள்ளது. திருமணத்தை பாட்னாவில் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சந்திரிகா ராயின் சொந்த ஊரான பர்சாவில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. #tamilnews