மகனின் திருமணத்தில் பங்கேற்பதற்காக லாலு பிரசாத் யாதவுக்கு 3 நாட்கள் பரோல்

கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைதாகி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு, தனது மகன் திருமணத்தில் பங்கேற்பதற்காக 3 நாள் பரோல் அளிக்கப்பட்டுள்ளது. #laluseekingparol
மகனின் திருமணத்தில் பங்கேற்பதற்காக லாலு பிரசாத் யாதவுக்கு 3 நாட்கள் பரோல்
Published on

ராஞ்சி:

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ், ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால், ஜார்கண்ட்டில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கு வருகிற 12-ம் தேதி பாட்னாவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மே 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 5 நாள் பரோல் வேண்டி லாலுவின் வழக்கறிஞர் பிரபாத் குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து, லாலு பிரசாத் யாதவுக்கு 3 நாள் பரோல் அளிக்கப்பட்டுள்ளதாக, சிறைத்துறை ஐ.ஜி ஹர்ஷ் மங்கலா தெரிவித்துள்ளார். மேலும், பயணத்துக்கான நேரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று மாலையே விமானம் மூலம் லாலு பிரசாத் கிளம்ப உள்ளதாக, லாலு பிரசாத்தின் நெருங்கிய நண்பரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் பொதுச்செயலாளருமான போலா யாதவ் தெரிவித்துள்ளார். #laluseekingparol 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com