

புதுடெல்லி:
ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி. இவர் அந்த கட்சி சார்பில் பாராளுமன்ற எம்.பி.யாக இருந்து வருகிறார்.
மிசா பாரதியும் அவரது கணவர் சைலேஷ்குமாரும் ஏராளமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் பண பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மிசாபாரதி ரூ.8000 கோடி அளவுக்கு பண பரிமாற்றம் மோசடி செய்து இருப்பது உறுதியானது.
இதையடுத்து பல கட்ட விசாரணைகள் நடந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் மிசாபாரதி மீதும், அவர் கணவர் மீதும் கடந்த வெள்ளிக்கிழமை குற்றப் பத்திரிகை பதிவு செய்யப்பட்டது.
மிசாபாரதி மீது குற்றச்சாட்டுகள் உறுதியாகி வருவதால் அமலாக்கத் துறையும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மிசாபாரதி மற்றும் அவர் கணவர் பெயரில் உள்ள சொத்துகளை முடக்கி கையகப்படுத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
இது லாலு பிரசாத் யாதவுக்கும், அவர் குடும்பத்தினருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மகன் தேஜஸ்வியின் துணை முதல்-மந்திரி பதவியை காப்பாற்ற லாலு போராடியபடி உள்ளார். இதற்கிடையே மகளின் சொத்துக்கள் கை நழுவுவது அவருக்கு சோதனையையும் வேதனையையும் கொடுத்து உள்ளது.