

அங்காரா:
ஈராக்கின் வடபகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் குர்திஸ்தான் பகுதி ஈராக் ஆட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுகிறது. ஈராக்கின் எண்ணெய் வளம் மிக்க இந்த பகுதியை குர்திஸ்தான் என்ற சுதந்திர நாடாக அறிவிக்கும்படி குர்து மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக ஈராக் அரசை எதிர்த்து போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் நடந்துவரும் சண்டைகள் காரணமாக பல அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். இங்கு நடைபெறும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வடக்கு ஈராக் மற்றும் துருக்கியின் தென்கிழக்கு பகுதிகளில் உள்ள துருக்கி ராணுவத்தினரை குறிவைத்து குர்து போராளிகள் நடத்திய வெவ்வேறு தாக்குதல்களில் மூன்று துருக்கி ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
வடக்கு ஈராக்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்ததோடு, இரண்டு பேர் காயமடைந்தனர். துருக்கியின் ஹக்காரி மாகாணத்தின் குகுர்கா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததோடு, ஐந்து பேர் காயமடைந்தனர் என துருக்கி ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை வடக்கு ஈராக்கில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 49 குர்து போராளிகள் கொல்லப்பட்டதாக துருக்கி ராணுவத்தினர் கூறியுள்ளனர். #Kurdishmilitant #Iraq #Turkey #tamilnews