

கோவை:
கோவை குறிச்சி மாச்சம் பாளையம் ரோடு அம்மணியம்மாள் காலனியை சேர்ந்தவர் ஆபிரகாம் ஜெயக்குமார் (வயது 30).
இவர் தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார். கடந்த 1 வாரத்துக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் நெல்லை சென்றார்.
இன்று அதிகாலை வீடு திரும்பிய போது முன்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 6 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவஇடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.