

லண்டன்:
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் லண்ட்ன் நகரில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்று போட்டியில் 12-ம் நிலை வீராங்கனையான பிரான்சின் கிறிஸ்டினா மெலடனோவிக்கும் அமெரிக்காவின் அலிசால் ரிஸ்கியும் மோதினர். இப்போட்டியில் கிரிஸ்டினா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
தனது தோல்வி குறித்து பேசிய கிறிஸ்டினா “போட்டி நடந்த மைதானம் தரமானதாக இல்லை, மைதானத்தில் புற்கள் சரியாக பராமரிக்கப்படாததால் மைதானம் வழுக்கும் தன்மையோடு இருந்தது. இரண்டு செட்கள் முடிந்த நிலையிலேயே ஆட்டத்தை கைவிட இருவருமே எண்ணினோம். மைதானத்தில் ஒரு பக்கத்தில் பெரிய துளை இருந்தது. வானிலையும் வெட்பமாக இருந்ததால் அனைத்தும் வறண்டு போய்விட்டது. இப்போட்டியை காயம் அடையாமல் நிறைவு செய்தது அதிர்ஷ்டவசமானது” என்றார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரோஜர் பெடரர் ‘இருவீரர்களும் மைதானம் குறித்து ஒரே கருத்தினை தெரிவிக்கும் பொழுது அதுகுறித்து சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என கூறியுள்ளார்.
ஆனால், மைதானம் விளையாடுவதற்கு ஏற்றதாக தான் உள்ளதாக விம்பிள்டன் நிர்வாகம் கூறியுள்ளது. இந்த விம்பிள்டன் தொடரில் மைதானம் சரி இல்லாமல் இருப்பதால் சில வீரர்கள் காயமடைந்து போட்டியை நிறைவு செய்யாமல் விலகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.