ஆந்திராவில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் இன்று இரவு தமிழக எல்லைக்கு வருகிறது

ஆந்திராவில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் தமிழக எல்லையான தாமரைக்குப்பம் ‘ஜீரோ’ பாயிண்டுக்கு இன்று இரவு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Krishnawater
ஆந்திராவில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் இன்று இரவு தமிழக எல்லைக்கு வருகிறது
Published on

சென்னை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வேகமாக வறண்டு வருகின்றன.

4 ஏரிகளில் மொத்தம் 949 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. (மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி நீர் சேமித்து வைக்கலாம்).

இந்த தண்ணீரை வைத்து இன்னும் ஒரு மாதத்துக்கு மட்டுமே சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற முடியும். இந்த நிலையில் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதேபோல் தண்ணீர் இன்றி கருகி வரும் நெல் பயிர்களை காப்பாற்ற கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆந்திர விவசாயிகளும் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு பின்னர் 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணா தண்ணீர் ஆந்திர மாநிலம் சத்யவேடு அருகே வந்து கொண்டு இருக்கிறது. அங்கிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தமிழக எல்லையான தாமரைக்குப்பம் ‘ஜீரோ’ பாயிண்டுக்கு இன்று இரவு கிருஷ்ணா நீர் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பூண்டி ஏரியை தண்ணீர் நாளை காலை சென்றடையும். தொடர்ந்து கிருஷ்ணா கால்வாயில் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. தற்போது வெறும் 166 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் ஏரியில் 1,540 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது. #Krishnawater

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com