பீன்ஸ் கிலோ ரூ.160, தக்காளி ரூ.40- காய்கறி விலை கடும் உயர்வு

சென்னையில் காய்கறி விலை கடும் உயர்வால் பீன்ஸ் கிலோ ரூ.160, தக்காளி ரூ.40-க்கு விற்பனையாகி வருகிறது. #KoyambeduMarket
பீன்ஸ் கிலோ ரூ.160, தக்காளி ரூ.40- காய்கறி விலை கடும் உயர்வு
Published on

சென்னை:

பருவ மழை பெய்யாததாலும் கடும் வறட்சி காரணமாகவும் காய்கறி உற்பத்தி குறைந்துவிட்டது. கோயம்பேடு காய்கறி மொத்த மார்க்கெட்டுக்கு காய்கறி லாரி லோடு வரத்து பாதியாக குறைந்துள்ளது.

தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்பட அண்டை மாநிலங்களிலும் கடும் வெயில் காரணமாக காய்கறி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 10 லாரிகளில் பீன்ஸ் கொண்டுவரப்படும். தற்போது இது பாதியாக குறைந்து விட்டது. இதனால் பீன்ஸ் விலை ரு.130 ஆக உயர்ந்தது.

கடந்த சில நாட்களாக உதகைமண்டலத்தில் உற்பத்தியாகும் பீன்ஸ் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரவில்லை.

மழை இல்லாததாலும் கடும் வெயிலாலும் காய்கறி விலை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் தக்காளி விலை இரட்டிப்பாகி கிலோ ரூ.40-க்கு விற்கப்படுகிறது. பாகற்காய், புடலங்காய் வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது.

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் 375 லாரி லோடு காய்கறிகள் வரும். தற்போது 300 லாரி லோடுகளாக குறைந்து விட்டது.

காய்கறி வரத்து குறைந்ததால் பீன்ஸ் விலை கிலோவுக்கு ரூ.160 ஆக உயர வாய்ப்பு உள்ளது.

இது குறித்து, கோயம்பேடு காய்கறி, பழம், பூ மார்க்கெட் சங்க பொருளாளர் பி.சுகுமார் கூறியதாவது:-

கோடை வெயில் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்துவிட்டது. இதனால் காய்கறி விலை உயர்வடைந்துள்ளது. வெண்டைக்காய், வெங்காயம், கத்தரிக்காய் விலையில் மாற்றம் இல்லை.

கடந்த 10 நாட்களாக மாங்காய் உற்பத்தி வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.40 முதல் 60 ஆக குறைந்துள்ளது. கோடை விடுமுறை காரணமாக மார்க்கெட்டில் காய்கறி விற்பனை 30 சதவீதம் குறைந்து விட்டது. வருகிற ‘மே’ மாதம் புதிய காய்கறிகள் உற்பத்தியாகி வரும் போது விலை குறையும் என எதிர் பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். #KoyambeduMarket

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com