கோத்தகிரியில் 13 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

கோத்தகிரியில் 13 வயது சிறுமியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள நுந்தளாமட்டம் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார்(வயது 21). இவருக்கும், கோத்தகிரி பகுதியை சேர்ந்த ஒரு 13 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையில் நவீன்குமார், அந்த சிறுமியை மிரட்டி கடந்த மாதம் 25-ந் தேதி நுந்தளாமட்டம் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு கடத்தி சென்றார். பின்னர் காங்கேயம் அருகே சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு அழைத்து சென்றார்.

இந்த நிலையில் சிறுமியை நவீன்குமார் கடத்தி சென்றுவிட்டதாக அவளது பெற்றோர் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.

போலீசார் தேடுவதை அறிந்த நவீன்குமார் அந்த சிறுமியுடன் நேற்று காலை கோத்தகிரிக்கு வந்தார். பின்னர் அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நவீன்குமார் அந்த சிறுமியை மிரட்டி கடத்தி சென்றது தெரியவந்தது. பின்னர் நவீன்குமாருக்கு எதிரான புகார் குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், நவீன்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை குன்னூர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நவீன்குமார் ஏற்கனவே போக்சோ சட்டத்தில் கைதானவர் என்பதும், அவர் மீது மேலும் 3 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அவரிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுமியை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com