கொடைக்கானலில் கொட்டி தீர்த்த மழை- அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கொடைக்கானலில் கொட்டி தீர்த்த மழை- அணைகளில் நீர்மட்டம் உயர்வு
Published on

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது மாறுபட்ட சீதோசனம் நிலவி வருகிறது. காலை நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்தும் மாலையில் இதமான குளிர் காற்றும் வீசி வருகிறது.

மேலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த மழையின் காரணமாக சுற்றுலா பயணிகள் அறைகளிலேயே முடங்கினர்.

3 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் பூமி குளிர்ந்தது. வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயரத் தொடங்கி உள்ளது. பழனி நகருக்கு குடிநீர் ஆதாரமான பிரதான ஏரி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதேபோல் நகராட்சி நீர்தேக்கம், மனோரஞ்சிதம் சோலை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது. விவசாயிகளும் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகளை நடவு செய்துள்ளனர்.

தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக அவை செழித்து வளரத் தொடங்கி உள்ளது. ஆப்சீசன் தொடங்க உள்ள நிலையில் சாரல் மழை பெய்து இதமான சீதோசனம் நிலவி வருவது வியாபாரிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

அடுத்த வாரம் காலாண்டு தொடங்க உள்ளது. எனவே அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கின்றனர். அவர்களை மகிழ்விக்கும் வண்ணம் பிரையண்ட் பூங்கா மற்றும் கொடைக்கானல் நகர் பகுதிகளில் உள்ள பூங்காக்களில் புதிய மலர் செடிகள் நடப்பட்டு தற்போது பூத்து குலுங்குகின்றன.

சுற்றுலா பயணிகளை வரவேற்க்கும் வண்ணம் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக இறங்கி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com