கிசான் திட்டத்தில் முறைகேடு: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 2 பெண் ஊழியர்கள் கைது

கிசான் திட்டத்தில் முறைகேடு காரணமாக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 2 பெண் ஊழியர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

விழுப்புரம்:

பிரதமரின் விவசாயிகளுக்கான ஊக்க நிதி உதவி திட்டத்தின் கீழ் தமிழகத்தில உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் தலா ரூ. 2 ஆயிரம் வீதம் 3 தவணையாக அவரவர் வங்கி கணக்கில் ரூ.6 ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாதோர் பயன்பெற்று உள்ளதாகவும், இதில் முறைகேடுகள் நடந்து உள்ளதாக புகார் எழுந்தனர்.

இது பற்றி அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்துறை இணை இயக்குனர் ராஜ சேகர் தலைமையில் துணை இயக்குனர்கள் செல்லப்பாண்டியன், கண்ணகி, மல்லிகா, பெரிய சாமி ஆகியோர் தலைமையிலான குழுவினர் 13 வட்டாரங்களில் 15-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை தகுதியற்ற 90 ஆயிரம் பேர் பயனாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 42 ஆயிரம் பேர் முறைகேடாக சேர்க்கப்பட்டவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் இதுவரை 27 ஆயிரம் பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.8 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதிரடி விசாரணை நடந்து வருகிறது.

இந்த முறைகேடு காரணமாக வேளாண் துறையில் பணியாற்றிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து நடந்த விசாரணையில் வல்லம் ஊராட்சி ஒன்றிய வேளாண் விரிவாக்க அலுவலக வேளாண் உதவி அலுவலர்கள் ஆயிஷாபி (வயது 33), சாவித்திரி (34) ஆகிய 2 பெண் அதிகாரிகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் நேற்று ஒப்பந்த ஊழியர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com