

பியாங்யாங்:
உலக நாடுகளின் கண்டனம், ஐ.நா. சபையின் பொருளாதார தடைகள் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதேசமயம், அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் சமீபத்தில் விதிக்கப்பட்டபொருளாதார தடை வடகொரியாவுக்கு கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, வட கொரியா ராணுவத்தில் தலைமை மார்ஷலாக பதவி வகித்த ஹ்வாங் பியாங்-சோ என்பவருக்கு எதிராக சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியாகின. இதையடுத்து, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் மாதம் 13-ம் தேதியில் இருந்து அவர் காணாமல் போனதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், அரசு கொலையாளிகளால் (death squad) ஹ்வாங் பியாங்-சோ சுட்டுக் கொல்லப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
முன்னர், நாய்களுக்கு நடுவில் தள்ளிக் கொல்வது, ஆளில்லா உளவு விமானம் மூலமாக தாக்கிக் கொல்வது என நூதனமான வகையில் தனது அரசியல் எதிரிகளை கொன்று குவித்துள்ள வடகொரியா அதிபர் ரகசியமாக ஹ்வாங் பியாங்-சோ கொன்றிருக்கலாம் என அந்த தகவல் தெரிவிக்கின்றது.